தமிழக வளர்ச்சிக்கு செவிசாய்க்குமா பா.ஜ.க.!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

RAJNATH_SINGH_1339342fஇந்திய கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை அலச ஆரம்பித்து அதிர்ந்து போயுள்ளன. மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சி, அந்த மக்கள் தங்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றியது குறித்து அதிர்ந்துபோயுள்ளது. உத்திரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் இந்துக்களே வெற்றிபெற்றது உலக அதிசயம். ராகுல்காந்தி ஆதரவாளர்கள் உத்திரபிரதேசத்தில் முஸ்லீம்களை வளைத்துப்பிடிக்க, அவர்கள் வளைந்து, நெளிந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரசுக்கு ஆப்பு அடித்துள்ளனர். நந்தவனத்து ஆண்டி கூத்தாடி உடைத்தாண்டி கதையாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்து அரசியல் வீதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தலையாட்டி பொம்மைகளை முதல்வர்களாக நியமித்து, காங்கிரஸ் திணறுகிறதாம். முக்கியமாக காங்கிரஸ் புல் பூண்டு தெரியாமல் அழிந்த மாநிலம் ஆந்திரம் என்கிறார்கள். ராகுல்காந்தியின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவாளர்களே ஆப்பு அடித்து உள்ளனர். அரசியல் நிர்வாகம் தெரியாத ராகுல் இளைஞர்கள், லேப்டாப் வைத்து பணி செய்து காங்கிரஸ் இருதயம் லப்டப் என்று வேகமாக இயங்குகிறதாம். ராகுல்காந்தி விளையாட்டு பொம்மையாக காட்சி தருவதாக இந்திய இளைஞர் அணி கூறுகிறது.
கச்சத்தீவு தமிழகத்தின் சொத்து. அதனை கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற தி.மு.க. தலைமை செய்த மாபெரும் தவறு. தற்போது தமிழ் இனத்தை அழித்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் குலத்தை அழிப்பதில் காங்கிரசுக்கு அதிக உற்சாகம் இருந்ததாக தமிழ் வெறியர்கள் கூறுகிறார்கள். இலங்கை அதிபருக்கு பா.ஜ.க.வில் சில தலைவர்கள் நட்புக்கரம் நீட்ட ஆரம்பித்து உள்ளார்களாம். இது தமிழக அறிவு ஜீவிகளையும், கறைபடிந்த அதிகாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கச்சத்தீவு உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு படையின் கீழ் சிறிதுகாலம் கொண்டு வரப்படவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்கள். பிறகு தமிழக உரிமையை நிலைநாட்டி, தமிழகம் வசம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்து உலவுகிறது. உடனடியாக தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை அளிக்கவேண்டியது மத்திய அரசின் கடமை எனப்படுகிறது. தமிழக பா.ஜ.க.வின் குரல் உயர்மட்டத்தில் ஒலிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தமிழக உரிமைகளை மத்திய அரசுடனான உரிமையுடன் பெற்றுக்கொள்ள, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயகாந்த் உடனடியாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். இவர்களது ரசிகர்களின் ஆதரவால் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
மத்திய பா.ஜ.க. தமிழக வளர்ச்சிக்கு தமிழக நடிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள்.