வானிலை முன்னறிவிப்பு: மேலும் 4 நாள் கனமழை நீடிப்பு !

Filed under: சென்னை,தமிழகம் |

3Dasiasec_ir1Rதமிழகத்தில் மேலும் 3 முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறும்போது, “இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலை கொண்டுள்ளன. இவை மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன.

இதனால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் தரைக்காற்று அவ்வப்போது அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதி கனமழை என்றால் ஒரே நாளில் 25 செ.மீ. அளவு மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதிகபட்சமாக 15.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் இதுவரை 53 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்றார்.